Sunday, May 11, 2014

அன்பு அம்மா - Happy Mothers Day

அன்பு அம்மா
பாசத்தின் இலக்கணம் நீயே அம்மா
அழகு அன்பெனும் ஓவியம் நீயே அம்மா
மனம் உருக்கும் காவியம் நீயே அம்மா
தினம் தொழுதிடும் தெய்வம் நீயே அம்மா

உயிரை பகிர்ந்தது நீயே அம்மா
என்னை உள்ளத்தில் சுமந்தது நீயே அம்மா
உருவம் கொடுத்தது நீயே அம்மா
என்னை உயரத்தில் சேர்த்தது நீயே அம்மா

இவ்வுலகத்தில் என்னை பெற்றெடுக்க
உன் வயற்றில் சுமந்தது நீயே அம்மா
என் முதல் அழுகை கண்டு நீ சிரிக்க
வலியில் செத்துப்பிழைத்தது நீயே அம்மா

தட்டுதடுமாறி நான் நடக்க
என் கை பற்றி கற்பித்தது நீயே அம்மா
பட்ட காயத்தால் நான் துடிக்க
காயம் இட்ட தரையை அடித்தது நீயே அம்மா

இரவில் தூக்கம் கலைந்து நான் அழ
அரவணைத்து சமாதான படுத்தியது நீயே அம்மா
ஜொரத்தில் என் தேகம் நெருப்பாய் கொதிக்க
உன் உடல் வருத்தி என்னை காத்தவள் நீயே அம்மா

மதிப்பெண்கள் குறைந்து நான் குறுகி நிக்க
என்னை அணைத்து ஊக்கம் கொடுத்தவள் நீயே அம்மா
ஏன்டா குறைந்ததென்று அப்பா முறைக்க
அந்த வீச்சிலிருந்து காத்தவள் நீயே அம்மா

பள்ளி முடித்து பசியோடு நான் திரும்பி வர
ஆவி பறக்க சமைத்து கொடுத்தவள் நீயே அம்மா
பிடித்த உணவை நான் திரும்ப திரும்ப கேட்க
உன் பங்கினை எனக்கு தந்தவள் நீயே அம்மா

விடுமுறை நாட்களில் நான் இளைப்பாற
விடுமுறையின்றி உழைதவள் நீயே அம்மா
சுட சுட உணவுகளை நான் உண்டு மகிழ
பரிவுடன் பழையது புசித்தது நீயே அம்மா

அறுசுவை உணவுகளை நீ சமைத்து வைத்து
என் நாக்கின் நீளத்தை பெருக்கியது நீயே அம்மா
வற்றல் குழம்பு உசிலியால் இல்லம் மணக்க
இவ்வுலகில் உனக்கு நிகர் நீயே அம்மா

என் வாழ்வில் வெளிச்சம் நிரம்பி இருக்க
இருளில் மெழுகாய் தேய்ந்தவள் நீயே அம்மா
நம் இல்லம் என்றென்றும் செழித்து இருக்க
வேண்டுதல் விரதமென்று இருந்தவள் நீயே அம்மா

பல ஜன்மம் புண்ணியங்களை சேமித்து வைத்து
உன் சேயாய் பிறந்தவன் நானே அம்மா
இனிவரும் ஜன்மங்களில் உன்னை தாயாய் பெற
வரம் தந்தருள வேண்டும் நீயே அம்மா

                                                                           - ராகவன் பத்ராசலம்